சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடலூரில் பாஜ தலைவர் அண்ணாமலையிடம் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை குரங்குகளுடன் ஒப்பிட்டும், அமைச்சர் செந்தில் பாலாஜியை மிக தரக்குறைவாகவும் விமர்சித்த செயல் கண்டனத்திற்குரியது. இதற்கு முன்னரும் பலமுறை கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களை அவமானப்படுத்தும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் அவர் நடந்து கொண்டுள்ளார். பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள திராணியில்லாமல் இதுபோன்று இழிவாக நடந்துகொள்வது என்பது பாஜவினரின் வாடிக்கையாகவே உள்ளது. அண்ணாமலை மட்டுமல்ல, எச்.ராஜா போன்றவர்களும் தொடர்ந்து பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஆட்சியும், ஊடகங்களை கட்டுப்படுத்தும் அதிகாரமும் தங்கள் கையிலிருக்கும் ஆணவ திமிரே அவர்களின் இதுபோன்ற பேச்சுக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது. செய்தியாளர்களிடம் குறைந்தபட்ச நாகரிகத்தைக் கூட கடைபிடிக்காமல், தரம் தாழ்ந்து ஏசியும், பேசியும் வரும் பாஜ தலைவர்களை புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….