புழல்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100% தேர்ச்சி பெற்ற அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டது. செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வியாபாரிகள் சங்கம் சார்பாக, செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் விழா செங்குன்றம் நெல் அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், செங்குன்றம் நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க செயலாளர் லோகநாதன் வரவேற்புரை ஆற்றினார். செங்குன்றம் நெல் அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் கோபி தலைமை தாங்கினார்.
இதில் தமிழ்நாடு நெல் அரிசி சம்மேளனத் தலைவர் துளசிங்கம், செயலாளர் மோகன் வாழ்த்துரை வழங்கி, 2022-23ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற கதிர்வேடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கேடயம் மற்றும் பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். அதனைத் தொடர்ந்து செங்குன்றம் பகுதியில் சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்ற அபினேஷ் குமாரை பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தனர். மேலும், 2022-23 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சங்கத் துணைத் தலைவர் ஜெயபால், இணைச் செயலாளர் நாகேந்திரன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார்.