திருப்பூர், மார்ச் 21: நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு பதிவுச்சான்றிதழ், காப்பீடு அவசியம் எனவும், அவ்வாறு இல்லாத வாகனங்களுக்கு பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதி கிடையாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடக்கிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் மனுத்தாக்கலுடன் தீவிர பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அரசியல் கட்சிகளின் கணக்குப்படி மூன்றரை வாரங்களே இன்னும் இருப்பதால் தொடர்ந்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்தக்கூடும். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கட்சியினர் ஆன்லைனில் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், இந்த வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்துக்கான வாகன அனுமதியை பல்வேறு கட்சிகளும் அணுகக்கூடும். இது ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பிரச்சார வாகனத்தின் வாகனத்தின் வண்ண புகைப்படம், பதிவுச்சான்றிதழ், வாகனக் காப்பீடு மற்றும் வாகனத்தின் தற்காலிக புகை அளவு சான்றிதழ்கள் இவையெல்லாம் இருக்க வேண்டும். இவை இல்லாதபோது, அந்த வாகனங்கள் பிரச்சாரத்துக்கு அனுமதிக்கப்படாது. பொதுவாகவே அனைவரும் பதிவுசான்றிதழ் வைத்திருப்பார்கள். ஆனால் காப்பீடு, தற்காலிக புகை அளவு சான்றிதழ் உள்ளிட்டவை இருக்காது. எனவே அப்படிப்பட்ட வாகனங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் அனுமதி கிடையாது கடைசி நேரத்தில் பலரும் எங்கள் வாகனங்களுக்கு, பிரச்சாரத்தில் அனுமதி தரப்படவில்லை என்பதற்கான காரணங்களில் மேற்கண்ட ஏதேனும் ஒரு காரணம் இருக்கக்கூடும். இவ்வாறு கூறினர்.