தேவாரம்/வருசநாடு, டிச. 29: பண்ணைப்புரம் மலையடிவார பகுதிகளில் காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோம்பை, பண்ணைப்புரம் மலையடிவார பகுதிகளில் காட்டுபன்றிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. இவை மாலை நேரங்களில் காடுகளை விட்டு கீழே இறங்குவதுடன், இங்குள்ள விளைநிலங்களை நாசம் செய்து வருகின்றன.
இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஆகையால் வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு, காட்டு பன்றிகளை மீண்டும் அடர்ந்த காடுகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோன்று கடமலைக்குண்டு மயிலாடும்பாறை, மூலக்கடை, பொன்னன்படுகை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மற்றும் கனமழையின் காரணமாக கொட்டை முந்திரி, இலவமரம், முருங்கை மரங்கள், பப்பாளி உள்ளிட்டவைகள் கடுமையாக சேதமடைந்தன. இந்நிலையில் வெள்ளை பூச்சி தாக்குதலால் பப்பாளி விவசாயம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.