திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், அதிகத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 22 நிரந்தர தொழிலாளர்களையும், 158 ஒப்பந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கக்கோரியும், இதற்கு தமிழக முதல்வர் தலையிட கோரியும் கம்பெனிக்கு நிலம் கொடுத்த விவசாய சங்க போராட்டக்குழு சார்பில் கடந்த 3 நாட்களாக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உண்ணாவிரத போராட்டத்திற்கு தனியார் கம்பெனிக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கே.அஆறுமுகம், செயலாளர் எ.சீனிவாசன், துணைத் தலைவர் எச்.இஸ்மாயில், செயற்குழு உறுப்பினர் வி.சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் ஜெய்ஸ், கார்த்திக், கருப்பையா, ஆதிகேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.கண்ணன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, துணைப் பொதுச் செயலாளர் கே.ரவி, சிபிஐ மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மீண்டும் தங்களுக்கு பணி வழங்க கோரியும் கடந்த 3 நாட்களாக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று சிபிஐ மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இந்நிலையில் போராட்டக் குழுவினர் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசரை சந்தித்து உண்ணாவிரத போராட்டம் குறித்து தகவல் தெரிவித்து தங்களது பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண கூறியும் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் அமைச்சர் நாசர் உடனடியாக மாவட்ட கலெக்டரை தொடர்புகொண்டு தொழிலாளர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுக் காண அறிவுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தனியார் கார் தொழிற்சாலை நிர்வாகத்துடன் பேசி வருகின்ற ஒன்பதாம் தேதி இரண்டு தரப்பினரின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து போராட்டக்குழுவினர் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். …