தேனி, டிச. 19: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் பெத்தாட்சிஆசாத் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு அளித்தார். இம்மனுவில் கூறியிருப்பதாவது : தேனி நகரில் சமதர்மபுரம், எம்.ஜி.ஆர் நகர், என்.ஆர்.டி நகர், கே.ஆர்.ஆர் நகர், ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்போருக்கு இதுநாள்வரை பட்டா வழங்கப்படவில்லை. இபகுதி வருவாய் கிராம கணக்கில் நத்தம் நிலமாக உள்ளது.
நிலஅளவை சர்வே செய்து,நகரளவையில் சேர்க்கப்படவில்லை. 50 ஆண்டுகளுக்கும் மேலாக பேரூராட்சி, நகராட்சி நிர்வாகத்தால் வரிவிதிப்பு செய்யப்பட்டுஅனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. வீட்டுமனைப்பட்டா இல்லாததால் ஆவணங்கள் பதிவு செய்ய இயலவில்லை. பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, இப்பகுதியில் குடியிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.