புதுச்சேரி, ஜன. 22: புதுவையில் பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி திலாசுப்பேட்டை வீமன் நகர் ஓடை வீதியை சேர்ந்தவர் மோட்டா விஜி (எ) விஜய் (18). இவர் மீது செல்போன் திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது 18வது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். கோரிமேடு போக்குவரத்து முனையம் அருகே தனது நண்பர்களுடன் பட்டா கத்தியில் கேக் வெட்டினார்.
இது குறித்து கோரிமேடு போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது, போலீசாரை கண்டதும் பிறந்தநாளை கொண்டாட வந்திருந்த விஜியின் நண்பர்கள் தலைதெறித்து ஓடி விட்டனர். விஜியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர். அவர் மீது ஆயுதம் வைத்திருந்த பிரிவில் வழக்குப்பதிந்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.