ஆவடி, ஜூன் 11: பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து பெங்களூரு நோக்கி கடந்த 8ம் தேதி ஹம்சப்பர் விரைவு ரயில் புறப்பட்டு சென்றது. இதில், முதியவர்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பயணிகள் இருந்தனர். இந்த ரயில், விஜயவாடா, கூடூர், வியாசர்பாடி, பெரம்பூர், வில்லிவாக்கம் வழியாக பெங்களூரு சென்றடையும். இந்நிலையில், பட்டாபிராம்- நெமிலிச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே, இந்த விரைவு ரயில் சென்றபோது ரயில் இன்ஜினில் பழுது ஏற்பட்டு, ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதனால், அதில் இருந்த பயணிகள் அவதிக்குள்ளானாகினர். தகவலறிந்த ஆவடி, வில்லிவாக்கம் ரயில்வே பொறியாளர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இன்ஜினில் ஏற்பட்ட பழுதை சுமார் 2 மணி நேரம் போராடி, சரி செய்ய முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதையடுத்து, திருநின்றவூர் ரயில் நிலையத்தில் இருந்து, மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டது. பின்னர், அந்த ரயில் பெங்களூரு நோக்கி தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால், 2 மணி நேரம் வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது.