பாலக்காடு, மார்ச் 17: பாலக்காடு மாவட்டம் ஆனக்கரையை அடுத்த தலக்கச்சேரி வேங்கச்சேரி பகவதி அம்மன் கோவில் தாலப்பொலி திருவிழாவில் அலங்கரித்த யானைகள் மீது அம்மன் பஞ்சவாத்யத்துடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மூலஸ்தான அம்மன் சிவப்புப் பட்டு ஆடையில் மஞ்சள் காப்பு அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில், அம்மனை தரிசனம் செய்ய திரளாக பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்திருந்தனர். விஷேச நிகழ்ச்சிகளை பார்க்க திரளாக பக்தர்கள் கூடியிருந்தனர். குருவாயூர் ஜோதிதாசின் சோபான சங்கீதம், மத்தளம் கேளி நாட்டியம் ஆகியவை இடம் பெற்றிருந்தன. மாலை 6 மணியளவில் மூன்று யானைகள் அலங்காரத்துடன் பஞ்சவாத்யங்கள் அதிர யானை மீது அம்மன் அமர்ந்து திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.