நாசரேத்: நெய்விளை தூய இமானுவேல் ஆலய பிரதிஷ்டையை முன்னிட்டு நடந்த அசன விருந்தில் திரளானோர் பங்கேற்றனர். தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் பிரகாசபுரம் சேகரம் நெய்விளை சபை தூய இமானுவேல் ஆலய 95 வது பிரதிஷ்டை விழா 8 நாட்கள் விமரிசையாக நடந்தது. முதல் நாள் மாலை 7 மணிக்கு பிரதிஷ்டை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதையடுத்து 3 நாட்கள் ஆலய வளாகத்தில் உயிர் மீட்சிக்கூட்டங்கள் நடந்தன. சென்னை ரேமா எழுப்புதல் ஊழிய நிறுவனர் காட்வின் மோசஸ் தேவ செய்தி அளித்தார். 5வது நாள் காலை 8.30மணிக்கு விற்பனை விழா, காலை 11.30 மணிக்கு தேவ ஊழியர் இல்லம் புதுமனை புகு விழா நடந்தது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல ‘லே’ செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமை வகித்து புதிதாகக் கட்டப்பட்டுள்ள தேவ ஊழியர் இல்லத்தை திறந்துவைத்தார். திருமண்டல துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் ஆரம்ப ஜெபம் செய்தார். பிரகாசபுரம் சேகரத்தலைவர் நவராஜ் வரவேற்றார்.