புதுக்கோட்டை: நீதிமன்றங்களில் பணியாளர் வேலைக்காக சிபாரிசு கடிதம் கேட்டு வர வேண்டாம் என்று புதுக்கோட்டையில் உள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வீட்டு முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதார பணியாளர், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர், தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி போன்ற 3,557 பணியிடங்கள் காலியாக இருந்தது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மாதம் எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த தேர்வை ஆயிரக்கணக்கானோர் எழுதினர். இந்த பணிகள் தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் பரிந்துரை கடிதம் பெற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் தினம்தோறும் அமைச்சர் வீட்டிலும், அலுவலகத்திலும் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை கீழ 2ம் வீதியில் உள்ள அமைச்சர் ரகுபதி வீட்டு முன் ஒரு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில், வேலைக்கு சிபாரிசு கடிதம் கேட்டு வர வேண்டாம். நீதிமன்ற பணியாளர் வேலையை பெறுவதற்கு நேரடியாகவும், கட்சி பிரமுகர்கள் சிபாரிசுடனும் பலர் முயற்சி செய்கின்றனர். தன்னிடம் யாரும் பரிந்துரை கடிதம் கேட்டு வர வேண்டாம். நீதிபதிகளை உள்ளடக்கிய தேர்வு குழுவினரே, பணியாளர்களை தேர்வு செய்கின்றனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் வீட்டில் இதுபோன்று நோட்டீஸ் ஒட்டியிருப்பதை கிராம மக்கள் வரவேற்றனர்….