நீடாமங்கலம், செப். 5: நீடாமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நீடாமங்கலத்தில் பழமை வாய்ந்த லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில், உரிமையாளர்களால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 1ம் தேதி காலை, பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டது. 2ம் தேதி, வாஸ்து சாந்தி செய்து யாகசாலை அலங்காரம் நடைபெற்றது. மாலையில் கும்ப பூஜையும் முதல்கால ஹோமமும் நடைபெற்றது. தொடர்ந்து 3ம் தேதி இரண்டாம் கால யாகபூஜை, மூலவர்களுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
நேற்று காலை கால சாந்தி பூஜை, மூலவர் ஹோமம் நடைபெற்றது. காலை 8.30 மணியளவில் கடம் புறப்பாடும், பிறகு பட்டாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க 9.30 மணியளவில் விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 9.45க்கு மூலவர்களுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.