நீடாமங்கலம், ஏப். 3: நீடாமங்கலத்தில் எளிய குடும்பத்தில் உத்திராபதி பிள்ளை-காசியம்மாள் தம்பதியினருக்கு 6வது பிள்ளையாக 1936ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியில் பிறந்தவர் தான் உ.நீலன். 6வது கடைசி பிள்ளை. 9ம் வகுப்பு மட்டுமே படித்து உழைப்பாலும், அறிவு ஆற்றலாலும், தனது முயற்சியாலும் ஆற்றல் மிக்கவராக உயர்ந்தார். தற்போதுள்ள திருவாரூர் மாவட்டம் வலங்கைமானுக்கு அருகில் இருக்கும் வடவேல்குடி கிராமத்தில் தேங்காய் வியாபாரம் செய்து கொண்டிருந்த திருஞானசம்பந்தம் என்பவரோடு இணைந்து வெற்றிகரமான வியாபாரம் செய்து வந்தார். சென்னை சைதாப்பேட்டை சென்று அங்கு ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடு பட்டார். அதன் வளர்ச்சியாக கல்வியாளராக வளர்ச்சியடைந்து கல்வி கூடங்கள் மன்றும் பல்வேறு நிறுவனங்களை நிறுவினார்.
பிறகு அரசியலில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து செயலாற்றினார். அரசியலில் பெரியார், காமராஜர், மூப்பனார், சிவாஜி கணேசன் போன்ற பெரிய பெரிய தலைவர்களின் பாராட்டை பெற்றவர்தான் உ.நீலன். மேலும் ஊடக வியலாளர் கவிஞர் வீரபாண்டியன் அடிக்கடி நீடாமங்கலம் தந்த ஜி.டி.நாயுடு என்று பேசுவதும் உண்டு. உ.நீலன் தந்தை, பெரியாரின் பெருந்தொண்டனாகவும், விடுதலை நாளிதழின் மேனாள் துணை ஆசிரியராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் துணைத் தலைவராகவும் செயல்பட்டார். இவர் 1-4-2024 அன்று இறைவனடி சேர்ந்தார். இன்று காலை 6 மணி முதல் நீடாமங்கலம் நீலன் பள்ளி வளாகத்தில் அவரது திருவுடல் வைக்கப்பட்டு இறுதி பயணம் மாலை 5 மணிக்கு நடை பெறுகிறது.