சென்னை: மின்பகிர்மான மண்டலங்கள் மற்றும் வட்டங்களில் இருந்து நிலுவை லஞ்ச வழக்கு விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என மின்வாரிய உயரதிகாரிகளுக்கு வாரிய லஞ்ச ஒழிப்பு டிஜிபி கடிதம் அனுப்பியுள்ளார்.மின்வாரியத்தில் நிலுவையில் இருக்கும் லஞ்ச வழக்கில் சிக்கியிருப்போர் மற்றும் குற்ற வழக்கு விவரங்களை, கடந்த ஜன.19ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு, அனைத்து பகிர்மானப் பிரிவு தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்டோரை மின்வாரிய லஞ்ச ஒழிப்பு டிஜிபி பி.கே.ரவி அறிவுறுத்தியிருந்தார். ஆனால் பெரும்பாலான மின்பகிர்மான மண்டலங்கள் மற்றும் வட்டங்களில் இருந்து நிலுவை லஞ்ச வழக்கு விவரங்கள் அனுப்பப்படவில்லை. இதையடுத்து மின்வாரிய லஞ்ச ஒழிப்பு டிஜிபி, அவற்றை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக மின்வாரிய லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: மின்வாரிய டிஜிபி அறிவுறுத்தியும், பெரும்பாலான மண்டலங்களில் இருந்து அறிக்கைகள் வரப்பெறவில்லை. அதே நேரம், மின்னஞ்சல் மூலமாக கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் தொடர்பான நகல்கள் அனுப்பப்படவில்லை. இதையடுத்து, மின்வாரிய தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்டோர் மீது டிஜிபி கடும் அதிருப்தி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில், குற்ற வழக்குகளில் இருந்து விடுதலையானவர், ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு, குற்ற வழக்குகள் தொடர்பான நகல்கள் மற்றும் இணைப்பு ஆவணங்கள் ஆகியவற்றை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு பெறப்படும் கோப்புகள் அடுத்து நடத்தப்படும் ஆய்வு கூட்டத்தில் பரிசீலிக்கப்படுவதோடு, ஊழல் தடுப்பு ஆணையர் தலைமையில் விரைவில் நடத்தப்படவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்….