ஆரணி, பிப். 20: ஆரணி அடுத்த வடுக்கசாத்து கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயி மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கல்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு(57), விவசாயி. இவரது, மனைவி செல்வி, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேட்டு மனைவியின் தாய்வீடான வடுக்கசாத்து கிராமத்தில் உள்ள மாமியாரின் நிலத்துடன் சேர்த்து, சேட்டு அதன் அருகில் நிலம் வாங்கி அங்கேயே வீடுகட்டி குடும்பத்துடன் வசித்துக் கொண்டு 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
மேலும், வடுக்கசாத்து கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(27), இவருக்கும், சேட்டுக்கும் விவசாய நிலத்தில் வழி சம்மந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருகிறது. இதனால், வழிசம்மந்தமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு வழி சம்மந்தமாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்தகராறில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், அவரது உறவினரான ஜெயமூர்த்தி இருவரும் சேர்ந்து சேட்டுவை சரமாரியாக அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடினர். இதில், படுகாயமடைந்த சேட்டுவை ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள வெங்கடேசன், ஜெயமூர்த்தி ஆகியோரை வலை வீசி தேடி வருகின்றனர்.