சோமனூர் : கருமத்தம்பட்டியில் உரிய இழப்பீடு வழங்காமல் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் எலச்சிபாளையத்தில் உயர்மின் கோபுரத்தில் ஏறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசூர் முதல் ஈங்கூர் வரை உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், நேற்று கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோயில் அருகிலுள்ள சண்முகசுந்தரம் என்பவரது விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க பணிகள் துவங்கப்பட்டன.இதனால், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு கையகப்படுத்தும் விவசாய நிலங்கள் அனைத்திற்கும் நியாயமான இழப்பீடு வழங்கிய பிறகு பணிகளை செயல்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி உயர்மின் கோபுர போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பொன்னுச்சாமி உள்ளிட்ட 4 பேர் உயர் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை, சூலூர் தாசில்தார் சகுந்தலா, தலைமை பொறியாளர் அருளரசன், உதவி பொறியாளர் பாபு ஆகியோர் விவசாயிகளுடன் அரசு ஒதுக்கீடு செய்த இழப்பீட்டுத் தொகை விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது….