புதுடெல்லி: சட்டீஸ்கரில் நிலக்கரி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வரின் துணை செயலாளர் உட்பட அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான ரூ.152.31கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படும் நிலக்கரிக்கு டன்னுக்கு ரூ.25 என சட்டவிரோத வரி வசூலிக்கப்பட்டதாகவும், இந்த ஊழலில் அரசின் முக்கிய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இது தொடர்பாக மாநில முதல்வர் பூபேஷ் பாகெலின் துணை செயலாளர் சவுமியா சவுராசி, ஐஏஎஸ் அதிகாரி சமீர் விஷ்னோய் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள், நகைகள், பணம், நிலங்கள் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். துணை செயலாளர் சவுமியாவுக்கு சொந்தமான 21 சொத்துக்கள், ஐஏஎஸ் அதிகாரி சமீருக்கு சொந்தமான 5 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.152.31கோடியாகும் என அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது….