புதுக்கோட்டை, மார்ச்22: அசாம் மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரம் வழியாக கன்னியாகுமரி செல்ல சைக்கிளில் பயணம் மேற்கொண்ட சோபி பிரதான் நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் வழியாக ராமேஸ்வரம் சென்றார். அப்போது சோபி பிரதான் கூறியதாவது: எனது சொந்த ஊர் அசாம் மாநிலம் தின்சுக்கியா மாவட்டம். எனக்கு 35 வயதாகிறது. எனக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். இந்தியா முழுவதும் சைக்கிளில் சென்று வர முடிவு செய்து கடந்த 45 நாட்களுக்கு முன்பு பயணத்தை தொடங்கினேன்.
தினமும் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடுவேன். இரவு நேரங்களில் ஏதாவது பெட்ரோல் பங்க்குகளில் நான் வைத்திருக்கும் டென்ட்டை அமைத்து தூங்குவேன். பின்னர் காலை எழுந்து சைக்கிளில் புறப்படுவேன். தினசரி குறைந்தது நூறு கிலோ மீட்டர் தூரம் செல்வேன். ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து கன்னியாகுமரி சென்று அங்கிருந்து கேரளா சென்று குஜராத் வழியாக காஷ்மீர் செல்ல திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.