வேதாரண்யம், மார்ச் 8: வேதாரண்யம் அருகே கொலை வழக்கு விசாரணைக்காக நாகை நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவர் சரமாரி வெட்டி படுகொலை செய்த 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் பகுதியை சேர்ந்தவர் சிவராசா சிவாஜி (40). கொலை வழக்கு சம்பந்தமாக இவர், நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராவதற்காக நேற்று காலை டூ வீலரில் சென்றார்.
அப்போது தேத்தாகுடி வடக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல், டூவீலரை வழிமறித்து பட்டாக்கத்தியால் சரமாரி வெட்டிவிட்டு காரில் தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சிவராசா சிவாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் சிவராசா சிவாஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘கருப்பம்புலத்தை சேர்ந்த ஆசிரியர் முருகானந்தம் சகோதரர் ரவி என்பவர் கடந்தாண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிவராசாவை பழிக்குப்பழியாக மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. இது தொடர்பாக 6 பேர் மீது சந்தேகம் இருப்பதால் அவர்களை தேடி வருகிறோம்,’என்றனர்.