நாகப்பட்டினம்,பிப்.12: பள்ளி கல்வித்துறை சார்பில் நாகூரில் பள்ளி கிளை நூலக கட்டிடம் கட்டும் பணிக்கு பூமிபூஜை நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். ரூ.99.82 லட்சம் நிதியில் கட்டப்படும் இந்த கட்டிடம் தரைத்தளம் 142.65 சதுரமீட்டர் பரப்பளவிலும், முதல் தளம் 142.65 சதுர மீட்டர் பரப்பளவிலும், முகப்பு மண்டபம் 9 சதுர மீட்டர் பரப்பளவிலும் அமைக்கப்பட உள்ளது. தரைதளத்தில் நூலகர் அறை, காப்பறை மற்றும் கழிவறைகளும் முதல் தளத்தில் படிப்பறை, கணினி அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.
இதன்பின்னர் நாகப்பட்டினம் அரசினர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் கழிவறைகள் கட்டும் பணி ரூ.60.33 லட்சம் மதிப்பிலும், ஆழியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் நான்கு வகுப்பறை கட்டடம் மற்றும் கழிவறை கட்டும் பணி ரூ.100.69 லட்சம் மதிப்பிலும், அக்கரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் பணிரெண்டு வகுப்பறை கட்டிடம் மற்றும் ஆய்வகம் கட்டும் பணி ரூ.324.76 லட்சம் மதிப்பிலும் கட்டப்பட உள்ளது. நாகப்பட்டினம் எம்எல்ஏ முகம்மதுஷாநவாஸ், நாகப்பட்டினம் நகரமன்ற தலைவர் மாரிமுத்து, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நாராயணமூர;த்தி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் பிரபாகரன், வேலுச்சாமி, பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.