நாகர்கோவில்: நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் இருந்து, மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்லும் மீட் தெருவில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் வாரிய பணியாளர்கள் நேற்று காலை வந்து பார்வையிட்ட போது, மின் கம்பி அறுந்து, பாழடைந்த வீட்டின் காம்பவுண்ட் புதருக்குள் கிடந்தது. புதருக்குள் இரு வாலிபர்கள் சடலமாக கிடந்தனர். இது குறித்து வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இருவரின் சடலத்தையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் இரு வாலிபர்கள், இந்த வீட்டின் அருகே ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதிக்கும் காட்சிகள் இருந்தன. விசாரணையில் இறந்து கிடந்தவர்கள் நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்த டான் போஸ்கோ (20), கருங்கல் தொலையாவட்டத்தை சேர்ந்த ஜாண் கிறிஸ்டோபர் (35) என்பது தெரிய வந்தது. இவர்கள் மீது ஏற்கனவே திருட்டு உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன. மின் ஒயரை வெட்டி அதில் உள்ள காப்பர் கம்பிகளை திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி அவர்கள் பலியானது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். …