நாகர்கோவில், டிச.28: நாகர்கோவிலில் பணியில் இருந்த போது தன் மீது, வழக்கு பதிவு செய்ததால் மாஜி இன்ஸ்பெக்டர் மீது அணுகுண்டு பட்டாசை பற்ற வைத்து வீசி விட்டு வாலிபர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் மரக்கடை உள்ளது. இந்த மரக்கடையில் நேற்று முன் தினம் மாலையில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரும், அவரது நண்பர் ஒருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த மரக்கடைக்கு முன்பு வாலிபர் ஒருவர் வந்தார். திடீரென அவர் கடைக்குள் இருந்த ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரை ஆபாசமாக திட்டி விட்டு, திடீரென அணுகுண்டு பட்டாசை பற்ற வைத்து இன்ஸ்பெக்டர் மீது வீசினார். இந்த பட்டாசு சற்று தொலைவில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதனால் அந்த மாஜி இன்ஸ்பெக்டர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இந்த சத்தம் கேட்டு மரக்கடையில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தப்பினார். இது குறித்து வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மாஜி இன்ஸ்பெக்டரிடம் நடந்த விசாரணையில், பட்டாசு வீசிய நபர், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த வருண் (42) என்பது தெரிய வந்தது. இன்ஸ்பெக்டர் பணியில் இருந்த போது வருண் மீது வழக்கு பதிவு செய்ததால் ஆத்திரத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வருண் மீது சிறு, சிறு அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.