நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் 231 மதுவிலக்கு வழக்குள் கடந்த மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி ஜவஹர் கூறினார். இது குறித்த அவர் கூறியதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க எஸ்பி ஜவஹர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தனிப்படை போலீசார் நடத்திய மதுவிலக்கு சோதனையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலிருந்து சாராயக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது 231 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 242 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 13 ஆயிரத்து 915 லிட்டர் பாண்டி சாராயம், 548 மத பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மதுக்கடத்தலுக்கு பயன்படுத்திய 23 இரண்டு சக்கர
வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது 7 வழக்குகள் மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்களை வைத்திருந்தவர்கள் மீது 83 வழக்குகள் மற்றும் ஆன்லைன் லாட்டரி சம்மந்தமாக 10 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை சம்பந்தமாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 கிலோ 600கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.