மயிலாடுதுறை, ஜன.3: மயிலாடுதுறை கூறிநாடு நாச்சிமுத்து நகரை சேர்ந்தவர் ஜியாத் ரகுமான் (25). இவர் நீடூரில் உள்ள ஒரு பிரியாணி கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கடையில் பிரியாணி பார்சல் கட்டிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த நீடூர் அன்புநாதபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த அபினேஷ் (23) மற்றும் சிலர் பிரியாணி பார்சல் கேட்டுள்ளனர். பார்சலை வாங்கிய அபினேஷிடம், ஜியாத் ரகுமான் பணம் கேட்டுள்ளார். அப்போது எங்களிடமே பணம் கேட்கிறாயா என்று அபினேஷ் கோபத்தில் திட்டியுள்ளார். இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அபினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து உருட்டுக்கட்டையால் ஜியாத் ரகுமானை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஜியாத் ரகுமான் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ஜியாத் ரகுமான் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார், அபினேஷை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.