மயிலாடுதுறை, மார்ச் 23: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஆகியோருக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர், மாவட்ட தேர்தல் அலுவலர் மகாபாரதி தலைமை வகித்து பேசுகையில்,
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீரகாழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 3 பறக்கும் படை மற்றும் 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் என 9 பறக்கும் படை குழுக்கள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகிறது. தனிநபர் ஒருவர் ரூ.50,000/- வரை எவ்வித ஆவணங்களும் இன்றி பணத்தை கொண்டு செல்லலாம். ரூ.50,000 க்கு மேல் பணம் ரொக்கமாக கொண்டு செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ரூ.10,000 க்கு மேற்பட்ட மதிப்புடைய பொருட்கள், மதுபானங்கள், பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படின் அவற்றை பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஒரு கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ரூ.1 லட்சம் வரை ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லலாம்.
அனைத்து வாகனங்களிலும் ஏதாவது கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி ஆகியவை இருப்பின் அவை அகற்றப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அனுமதி பெற்ற வாகனங்களில் மட்டும் ஏதேனும் ஒரு கொடி, பேனர்,பதாகை வைத்துக் கொள்ள அனுமதி உண்டு.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக அளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வரும் சூழலில் அப்பகுதியில் சோதனையிடும் பொருட்டு வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் நேரடியாக பறக்கும் படையினர் வீடு. குடோன் உள்ளிட்ட பகுதிகளை சோதனையிடக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள், அன்பளிப்புகள், மதுவகைகள் விநியோகம் செய்வதாக புகார்கள் வரப்பெறும் பட்சத்தில் பறக்கும் படையினரால் மேற்படி சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்ல இயலாத நிலை ஏற்படும் பட்சத்தில், அருகில் இருக்கும் நிலையான கண்காணிப்பு குழுவிளருக்கோ (Static Surveillance Team) அல்லது சம்பவ இடத்திற்கு அருகில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏதேனும் நேர்தல் விதிமீறல் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டாலோ அல்லது பணம் / பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் தேர்வுகளிலோ சம்மந்தப்பட்ட பறக்கும் படையில் இடம்பெற்றுள்ள காவல்துறை அலுவலர் அதற்குரிய வாக்குமூலங்களை பதிவு செய்து, காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.பெண் பயணியின் கைப்பைகள் பெண் போலீசாரால் மட்டுமே ஆய்வு செய்திடல் வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட கலெக்டர்பார்வையிட்டு. பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரை GPS கருவி மூலம் கண்காணிப்பு செயலி வழியாக கண்காணிக்கப்படுவதை ஆய்வு செய்தார். இதில் டிஆர்ஓ மணிமேகலை , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) சந்தானகிருஷ்ணன் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ரவி , உதவி ஆணையர் (கலால்) ராஜகணேஷ் உடன் இருந்தனர்.