நல்லம்பள்ளி, மே 12: நல்லம்பள்ளி அருகே நாகர்கூடல் பகுதியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் மஞ்சநாயக்கன அள்ளி பகுதியில் இருந்து அரசு பஸ் ஒன்று, நேற்று மதியம் தர்மபுரியை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதில், 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். நாகர்கூடல் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக டூவீலரில் சென்றவர் பஸ்சை முந்தி செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து, டூவீலர் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை வளைத்துள்ளார். இதில், நிலைதடுமாறிய பஸ் எதிர்பாராத விதமாக சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு முன்னாள் எம்எல்ஏவும், தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான தடங்கம் சுப்ரமணி, தர்மபுரி வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேஸ்வரி பெரியண்ணன் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர். மேலும், இந்த விபத்து குறித்து இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.