Monday, May 13, 2024
Home » நரிக்குறவர், இருளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இணைய வழி இலவச வீட்டுமனை பட்டா முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

நரிக்குறவர், இருளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இணைய வழி இலவச வீட்டுமனை பட்டா முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

by kannappan

சென்னை: விளிம்பு நிலையில் உள்ள 57,978 நரிக்குறவர்  மற்றும் இருளர் இன மக்களுக்கும், 2,35,890 ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் மற்றும் 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி  இலவச பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கடந்த காலங்களில் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக ஏற்கனவே தனிநபர்களிடம் இருந்து நிலஎடுப்பு செய்யப்பட்ட நிலங்கள் மற்றும் ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த விவரங்கள் கிராம வருவாய் ஆவணங்களில் முறையாக பதிவேற்றம் செய்யப்படாததால், அப்பயனாளிகள் தங்களது நிலங்களுக்கான நில உரிமை ஆவணங்களை முழுமையாக பெற இயலாத நிலை இருந்து வந்தது. இதற்கு தீர்வுகாணும் வகையில், முதல்வர் அறிவுறுத்தலின்படி, பயனாளிகளின் விவரங்களை தமிழ்நில இணைய ஆவணங்களில்  பதிவு செய்து, இணையவழிபட்டா வழங்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இதுவரை சுமார் 11,873 ஹெக்டேர் ஆதிதிராவிடர் நலத்துறை நிலங்களும், சுமார் 2,668 ஹெக்டேர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நிலங்களும் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த நிலங்களில் மொத்தம் 2,35,890 பயனாளிகளும்  மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்ந்த நிலங்களில் 41,573 பயனாளிகளும் என மொத்தம் 2,77,463 பயனாளிகள் வீடுகட்டி வசித்து வருகிறார்கள். மேலும், புதிய பயனாளிகளை கண்டறியும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 31.3.2022 வரை மொத்தம் 43,911 பயனாளிகளுக்கு இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 2022-23ம் நிதியாண்டில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க மீதமுள்ள 2,33,552 குடும்பங்களுக்கும் இணையவழி பட்டாக்கள் வழங்கப்படும்.முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், விளிம்பு நிலையில் உள்ள 57,978 நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கும், 2,35,890 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி  இலவச பட்டாக்களை வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு  இணையவழி பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜயந்த், நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன், நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர் டி.ஜி.வினய் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2022-23ம் நிதியாண்டில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க மீதமுள்ள 2,33,552 குடும்பங்களுக்கும் இணையவழி பட்டாக்கள் வழங்கப்படும்….

You may also like

Leave a Comment

17 − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi