நாகப்பட்டினம்,ஏப்.4: நாகப்பட்டினம் நம்பியார்நகர் மீனவ கிராமத்தில் ரூ.6 கோடியே 35 லட்சம் மதிப்பில் அமையவுள்ள புயல் பாதுகாப்பு மையம் கட்டுமான பணியை கலெக்டர் அருண்தம்பு ராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாகப்பட்டினம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என நம்பியார் நகர் பஞ்சாயத்தார்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து ரூ.6 கோடியே 35 லட்சம் மதிப்பில் புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் அமைய வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை சார்பில் திட்டம் வகுக்கப்பட்டது. இதை தொடர்ந்து புயல் பாதுகாப்பு மையம் கட்டுமான பணிகள் தொடங்க நேற்று பூமிபூஜை நடந்தது.
நிகழ்ச்சியில் கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், எம்எல்ஏ முகம்மதுஷாநவாஸ் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களை கொண்டு அமையவுள்ள கட்டிடத்தின் தரை தளத்தில், உணவுக்கூடம், தாழ்வாரம், அலுவலகம், மின் அறை, சமையல் கூடம், கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் தளத்தில் தங்கும் வசதி, விழா கூடம், தாழ்வாரம், பாதுகாப்பறை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் அமையவுள்ளது. மழை காலம் தொடங்குவதற்கு முன்னதாக அக்டோபர் மாதம் 15ம் தேதிக்குள் பணிகளை முடிக்க கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார். நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, டிஆர்ஓ ஷகிலா, கவுன்சிலர் சுரேஷ், நம்பியார் நகர் பஞ்சாயத்தார்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.