மானாமதுரை, மார்ச் 15: மானாமதுரையில் நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கைகள் தின விழாவை முன்னிட்டு மானாமதுரை வைகை ஆற்றினை சுத்தம் செய்யும் பணிகள் துவங்கியது. மானாமதுரை நகரின் மத்தியில் வைகை ஆறு ஓடுகிறது. நேற்று நதிகளுக்கான சர்வதேச நடவடிக்கைகள் தினவிழாவிற்கு செயற்பொறியாளர் பாரதிதாசன் தலைமை வகித்தார். வைகை ஆற்றினை சுத்தம் செய்யும் பணிகளை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி துவக்கி வைத்தார்.
நகராட்சி துணைத்தலைவர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். உதவிப்பொறியாளர் செந்தில்குமார் வரவேற்றார். நான்கு மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் வைகை ஆற்றில் வளர்ந்திருந்த கருவேலமரங்கள், நாணல் புதர் செடிகளை அகற்றும் பணிகள் துவங்கின. நகராட்சி கவுன்சிலர்கள், பொதுப்பணித்துறை பணி ஆய்வாளர்கள் பெருமாள், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.