சென்னை: நடிகையை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதிமுக அரசில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன். இவருக்கு எதிராக கடந்த வாரம் துணை நடிகை சாந்தினி, காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தார். அதில், அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம். அந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்ற தன்னை மணிகண்டன் கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்க செய்தார். தற்போது திருமணம் செய்ய மறுப்பதுடன், அவருடன் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம், பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தல், தாக்குதல், காயம் உண்டாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மணிகண்டன் தலைமறைவானார். இந்த நிலையில், அவர் தனக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவில், திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறும் புகார்தாரர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்த புகாரை அளித்துள்ளார். தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகாரை சாந்தினி அளித்துள்ளார். சமுதாயத்தில் பிரபலமானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலாக நடிகை செயல்பட்டு வருகிறார். மலேஷியாவில் இதுபோல பலரை மோசடி செய்துள்ளதாக அவர் மீது புகார்கள் உள்ளன. அவரது விருப்பத்தின்பேரிலேயே இருவரும் உறவு வைத்துக்கொண்டோம். அவரை கருக்கலைப்பு செய்யும்படி மிரட்டவில்லை. அவராகவே கருக்கலைப்பு செய்து கொண்டார். சினிமா வாய்ப்பு இல்லாததால் பெற்றோரின் மருத்துவ சிகிச்சைக்காகவும் உதவி கேட்டதால் பரணி என்பவர் மூலம் 5 லட்சம் கொடுத்தேன். அதை பரணி திருப்பி கேட்டது முதல் என்னை பிளாக்மெயில் செய்ய தொடங்கியுள்ளார். ஆரம்பகட்ட விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல் தனக்கு எதிராக அவசர அவசரமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது….