திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகைத் தொழிலாளியின் வீட்டில் 40 பவுன் நகை, ரூ 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலுவா பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். நகைத் தொழிலாளி. கொச்சியில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்கு நகைகளை செய்து கொடுத்து வருகிறார். இதனால் வீட்டில் எப்போதும் நகைகள் இருக்கும். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு 4 பேர் டிப்டாப் உடையணிந்து வந்தனர். தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும், வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என்றும் கூறி உள்ளனர். 4 பேரும் வீட்டில் இருந்த சஞ்சய் குடும்பத்தினரின் செல்போன்களை வாங்கி வைத்து உள்ளனர்.அதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த 40 பவுன் நகை, ரூ 2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்ட அந்தக் கும்பல், பரிசோதனைக்குப் பிறகு அவற்றைத் திருப்பி தருவதாகவும், அலுவலகத்தில் வந்து விவரங்களை தெரிந்து கொள்ளுமாறும் கூறிவிட்டு காரில் சென்று விட்டனர். பின்னர் சஞ்சய் சந்தேகத்தின் பேரில் கொச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது அப்படி யாரும் தங்களது அலுவலகத்தில் இருந்து வரவில்லை என்று கூறினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சஞ்ஜய் இது குறித்து ஆலுவா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடிக் கும்பலை தேடி வருகின்றனர்….