தோகைமலை, ஏப். 13: தோகைமலை அருகே கள்ளை பகுதியில் அனுமதி இல்லாமல் கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரியை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கள்ளை ஊராட்சி கள்ளையில் பெரிய ஆற்றுவாரி உள்ளது. இந்த ஆற்றுவாரியின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்காக அரசுக்கு சொந்தமான ஏற்றுவாரியில் சுமார் 15 ஆடி ஆழத்தில் 50 மீட்டர் நீளத்திற்கு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி பாலம் அமைக்கும் பணிகளுக்கு பயன்படுத்தி வந்து உள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்ததாக தெரிகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் குளித்தலை ஆர்டிஓ தனலட்சுமதி உத்தரவின் பேரில் தோகைமலை ஆர்ஐ முத்தக்ண்ணு, கள்ளை விஏஓ பிரபாகர் ஆகியோர் அந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கள்ளை ஆற்றுவாரியில் அரசு அனுமதி இல்லாமல் ஜேசிபி இயந்திரம் மூலம் ஒரு டிப்பர் லாரியில் சுமார் 15 ஆடி ஆளத்தில் 50 மீட்டர் நீளத்திற்கு கிராவல் மண் ஏற்றிக்கொண்டு இருந்து உள்ளனர்.
தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த லாரியை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் டிப்பர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு ஜேசிபி இயந்திரத்துடன் மர்ம நபர்கள் தப்பி ஓடி உள்ளனர். டிப்பர் லாரியை பறிமுதல் செய்த தோகைமலை ஆர்ஐ முத்துக்கண்ணு, தோகைமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். அதன்பேரில் தனியார் கன்சக்சனுக்கு சொந்தமான டிப்பர் லாரியின் டிரைவர் மீது வழக்கு பதிந்த போலீசார் தப்பி சென்ற டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.