சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைவதால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2வது அலையின் தாக்கம், தமிழக அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகளாலும், தடுப்பூசிகள் போடுவதை தீவிரப்படுத்தியதாலும் தொற்று படிப்படியாக குறைந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரேநாளில் 127 விமானங்களாக அதிகரித்தன. பயணிகளின் எண்ணிக்கையும் 8 ஆயிரத்திற்கும் அதிகரித்தது. நேற்றும் விமானங்கள், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.சென்னை-திருச்சி இடையே கடந்த 2 மாதங்களாக நாளொன்றுக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. தற்போது 2 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரைக்கு 3 விமானங்களாக இருந்தது, 5 விமானங்களாகவும், பெங்களூருக்கு 3 விமானங்களாக இருந்தது 6 விமானங்களாகவும், டெல்லிக்கு 9 விமானங்களாகவும், மும்பைக்கு 6 விமானங்களாகவும், ஐதராபாத்திற்கு 4 விமானங்களாகவும், அந்தமானுக்கு 3 விமானங்களாவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது ஊழியர்கள், அதிகாரிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….