தொட்டியம், ஏப்.2: தொட்டியம் அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.96 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் – நாமக்கல் செல்லும் சாலையில் முருங்கை ஊராட்சியை சேர்ந்த மருதம்பட்டி பகுதியில் பறக்கும் படை அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் போலீசார் அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் நாமக்கல் மாவட்டம் களங்காணி பகுதியை சேர்ந்த சஞ்சய் (23) என்பவர் ஆவணங்கள் இன்றி 96 ஆயிரத்து 30 ரூபாய் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த ராஜேஸ்வரி முசிறி துணை வட்டாட்சியர் லதாவிடம் ஒப்படைத்தார். இதையடுத்து தாசில்தார் பாத்திமா சகாயராஜ் வழியாக பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை துணை தாசில்தார் லதா முசிறி கருவூலத்தில் ஒப்படைத்தார்.