சென்னை: தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக, போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ஜன.1ம் தேதி வரை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து, பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, வரும் ஜன.1ம் தேதி வரை திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 600 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். இதுதவிர கோயம்புத்தூர், ஈரோடு, புதுச்சேரி ஆகிய முக்கிய நகரங்களுக்கு, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் , கூடுதல் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க அனைத்து போக்குவரத்துக் கழகங்களும் திட்டமிட்டுள்ளன. அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பொதுமக்களின் பயணங்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்ய தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in. tnstc official app ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த சேவையினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கு 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல்
previous post