விருதுநகர்: தொடர் மழையால் விருதுநகரில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழையாகவும், பல மாவட்டங்களில் மிதமழையாகவும் பெய்து வருகிறது. விருதுநகரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக நகரில் ரயில்வே பீடர் ரோடு, புல்லாலக்கோட்டை ரோடு, அல்லம்பட்டி பைபாஸ் ரோடு, கிழக்கு காவல்நிலைய சாலை, ராமமூர்த்தி ரோடு, ரயில்வே மேம்பாலம் கீழ்புற சாலைகள், மல்லாங்கிணறு ரோடு, படேல் ரோடு ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளன. இதில், ரயில்வே பீடர் ரோடு வழியாக மதுரை ரோட்டிற்கும், கோவில்களுக்கும், ரயில்நிலையத்திற்கும் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மல்லாங்கிணறு ரோடு ஒட்டுமொத்த 5 ஆண்டு புதிய சாலை மற்றும் பராமரிப்பு ஒப்பந்தகாரரின் பராமரிப்பில் உள்ளது. இந்த சாலையில் பாதளாச்சாக்கடை மேன்ஹோல்களை சுற்றி விபத்து உண்டாக்கும் வகையில் பள்ளமாக காட்சி தருகிறது. எனவே, நகரில் மழைக்கு சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் காளிதாஸ் கூறுகையில், ‘தொடர் மழையால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதில், மழைநீர் தேங்குவதால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த நகராட்சி, ஊராட்சிகளின் முக்கிய சாலைகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்….