கொடைக்கானல் : தொடர் மழையால், கொடைக்கானலின் குடிநீர் ஆதாரமான 2 நீர்தேக்கங்களும் முழுகொள்ளளவை எட்டியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கொடைக்கானலுக்கு குடிநீர் ஆதாரமாக 2 நீர்தேக்கங்கள் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ளது. ஒன்று ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் தேக்கம் ஆகும். மற்றொன்று திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மனோரத்தினம் சோலை குடிநீர் தேக்கம் ஆகும். இந்த இரு நீர்த்தேக்கங்களில் இருந்து தான் கொடைக்கானல் நகர் பகுதி முழுமைக்கும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. கொடைக்கானலை பொறுத்தவரை, மழை பெய்தால்தான் நகர மக்கள் குடிநீர் பஞ்சம் இன்றி வாழ முடியும். இந்நிலையில் கடந்த வாரம் பெய்த புயலின் காரணமாக பெய்த கனமழையால் ஆங்கிலேயர் காலத்து குடிநீர் தேக்கம் தனது முழு கொள்ளளவான 21 அடியை எட்டியுள்ளது.இதேபோல் புதிய நீர்த்தேக்கமான மனோரத்தினம் சோலை அணை தனது 34 அடி முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த இரு நீர்தேக்கங்களிலும் உள்ள நீர் இருப்பு கொடைக்கானல் நகர பகுதிக்கு போதுமானதாக உள்ளது. இதனால் ெபாதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கொடைக்கானல் குடிநீர் தேவைக்காக குண்டாறு குடிநீர் திட்டத்தில் இருந்தும் கூடுதலான தண்ணீர் வருகிறது. இதனால் கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி வாரத்தில் 3 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும், நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்வதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் ஆணையாளர் நாராயணன் தெரிவித்தார்….