கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமெனில், கல்வியில் சிறந்தோர் காட்டும் வழியைப் பின்பற்ற வேண்டும். அதுவும் கடவுளருளால் கல்விகற்ற சான்றோரின் வழியைப் பின்பற்றுவது சாலச்சிறந்தது. அவ்வகையில், கடவுளருளில் ஞானக்கல்வி கற்றவர்தான் காழிப்பிள்ளையாராகிய திருஞானசம்பந்தர். இவர் பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம் என்று பன்னிரு பெயர்களால் பரவப் படுவதும் குரு (தோணியப்பர்), லிங்கம் (பிரமபுரீசர்), சங்கமம் (சட்டைநாதர்) என்ற முப்பெரும் வழிபாடுகளையுடையதும் திருத்தருமையாதீன அருளாட்சிக்கு உட்பட்டதும் சோழவளநாட்டு காவிரி வட கரைத் தலத்தில் 14 ஆவது தலமுமாக விளங்குகிற சீர்காழியில் சிவனது செந்தாமரைத் திருவடிகளை தன் இதயத்துள் இருத்தி சிந்தைசெய்த சிவபாத இருதயருக்கும், பகம் என்றால் ஆறு. அரிய ஆறுகுணங்களைக் கொண்ட அம்மை பகவதியாருக்கும் திருமகனாகப் பிறந்தார்.இவர் மூன்று வயதை எய்தும்போது ஒரு நாள் தந்தையார் பிரம்மதீர்த்தக் குளத்திற்கு நீராடச் செல்லும்போது நானும் வருவேன் என்றுகூறி உடன் செல்கிறார். குளத்தில் மூழ்கி மந்திரம் செபிக்கும் தந்தையாரைக் காணோம் என்று எண்ணி, தந்தையாரே உலகியல் வாழ்வாகிய குளத்தில் மூழ்கிவிட்டார். ஆகவே, தன் அருளியல் வாழ்விற்குக் கலங்கரை விளக்கமாகத் திகழப்போகிறவர் கண்ணுதற் கடவுள்தான் என்று கருதி, குளத்தைப் பார்த்து அழாமல் ஆண்டவனின் தோணிபுர கோபுரத்தைப் பார்த்து அழுதருளினார். அப்போது இறைவனுடன் ஒருபாகமாக எழுந்தருளிய திருநிலைநாயகி, அதுவரை யாருமே அருந்தாத உண்ணாமுலையிலிருந்து கறந்தபாலை பொற்கிண்ணத்தில் ஏந்தி இறைவனிடம்தர, அதில் இறைவன் எண்ணரிய சிவஞானமாகிய இன்சுவையைக் குழைத்து ‘‘உண்” என பிள்ளையாருக்கு ஊட்டி மறைந்தார். கல்வி கற்கத் தொடங்கும் குழந்தைகளுக்கு கலைமகள் திருநாளன்று (சரஸ்வதி பூஜை) `ஓம்’ எனும் பிரணவத்தை எழுதி வித்யாரம்பம் செய்வது வழக்கம். த்+ஓ=தோ என்ற ஓங்காரமாகிய பிரணவத்தில் தொடங்கும் சிறப்பினது இப்பதிகம். அதுமட்டுமின்றி தமிழ் வேதமாகிய பன்னிரு திருமுறைகளிலேயே முதலாவது திருமுறையில் அமைந்த முதல் திருப்பதிகமாகும். இதனை ஓதி தோணியப்பரைத் தொழுதால் கல்வி வரம் கனிவாக ஓங்கும். ஆகவே… பதிகம் ஓதும்.திருச்சிற்றம்பலம்தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசி என் உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 1 முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன் கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப் பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 2 நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதி சூடி ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன் ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஓரூரிது வென்னப் பேர்பரந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 3 விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில் உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன் மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற் பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவ னன்றே. 4 ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்இவ னென்ன அருமையாகவுரை செய்யஅமர்ந்தென துள்ளங்கவர் கள்வன் கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்இது வென்னப் பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 5 மறைகலந்தஒலி பாடலோடாடல ராகிமழு வேந்தி இறைகலந்தஇன வெள்வளைசோரஎன் உள்ளங்கவர் கள்வன் கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப் பிறைகலந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 6 சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த உடைமுயங்கும்அர வோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன் கடல்முயங்குகழி சூழ்குளிர்கானல்அம் பொன்னஞ்சிற கன்னம் பெடைமுயங்குபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 7 வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன் துயரிலங்கும்உல கிற்பலஊழிகள் தோன்றும்பொழு தெல்லாம் பெயரிலங்கு பிரமாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 8 தாணுதல் செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும் நீணுதல் செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன் வாணுதல் செய்மக ளீர்முதலாகிய வையத்தவ ரேத்தப் பேணுதல் செய்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 9 புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா ஒத்தசொல்லஉல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன் மத்தயானைமறுகவ்வுரி போர்த்ததோர் மாயம்இது வென்னப் பித்தர்போலும்பிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. 10 அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே. 11சிவ.சதீஸ்குமார்…