விருதுநகர், ஏப். 17: தமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவை தேர்தல் நடக்க உள்ளதையடுத்து அரசியல் கட்சியினரின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியில் தேமுதிக விஜயபிரபாகரன் மற்றும் பாஜ உள்பட பல்வேறு கட்சியினர் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனு தாக்கல் மார்ச் 20ல் தொடங்கி மார்ச் 27 வரை நடந்தது. வேட்பு மனு தாக்கலுக்கு சில நாட்களுக்கு முன்பிருந்து வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கினர். தொடர்ந்து வேட்பாளர்கள், கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரித்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக
நடந்து வந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மாலை 6 மணிக்கு மேல் மைக் செட் கட்டி பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடத்துவது என எதுவும் செய்ய அனுமதி இல்லை. மேலும் சமூக வலைத்தளங்கள், ஊடகங்களிலும் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை வாக்குச்சாவடிகளுக்கு அலுவலர்கள் மூலம் மற்றும் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட உள்ளன.