செங்கல்பட்டு: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பற்றாளர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், தலைமையில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேர்தல் பற்றாளர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான அருண்ராஜ், தலைமையில் நடந்தது.
இதில், வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய பொருட்கள் வரப்பெற்ற விவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், 85 வயது மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு விருப்பம் தெரிவித்து 12டி படிவம் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டது குறித்து கேட்டறிந்தார். பறக்கும் படை மற்றும் இதர குழுக்கள் மூலம் பறிமுதல் செய்யப்படும் தொகையினை உரிய ஆவணங்களுடன் திரும்ப அளிக்கப்படும் விவரம் குறித்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி இருப்பு விவரம் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், வாக்காளர் பட்டியல் வெளியிடும் முன்பாக நிலுவையில் உள்ள மனுக்களின் மீது தீர்வு காண வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சப்- கலெக்டர் நாராயண சர்மா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அனாமிகா ரமேஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.