திண்டுக்கல், மார்ச் 26: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பஸ், ரயில்களில் பொருட்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பார்சல் பொருட்கள் கொண்டு செல்ல கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரொக்கப் பணம், கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்தகட்டமாக ரயில்களிலும் பயணியர் அதிக அளவில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணிகள் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகின்றனர். பயணிகளின் உடமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. சூட்கேஸ், டிராலி பேக், கைப்பைகள் அனைத்தும் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. இதேபோல் அரசு விரைவு பஸ்களிலும் அளவுக்கு அதிகமாக பொருட்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இப்பேருந்துகளில் பார்சல்கள் பதிவு செய்யும் போது, அதில் உள்ள விவரங்கள் கேட்கப்பட்டு வருகிறது. பணம், பரிசு பொருட்கள் போன்றவை கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசு விரைவு பஸ்களில் எடுத்து செல்லப்படும் பொருட்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. ரயில்வே துறையில் திண்டுக்கல், வடமதுரை, பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், பயணிகள் கொண்டு செல்லும் பொருட்களை கண்காணிக்க 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.