சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு கூடுதலாக 6 பறக்கும் படை குழுக்கள் என 16 சட்டமன்ற தொகுதிகளில் 96 பறக்கும் படை குழுக்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு அவற்றின் செயல்பாட்டினை மாவட்ட தேர்தல் அலுவலர், ஆணையர் பிரகாஷ் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் தேர்தல் அலுவலர், ஆணையர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தப் பறக்கும் படை குழுவில் ஒரு உதவி செயற்பொறியாளர், ஒரு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு ஆயுதம் ஏந்திய காவலர்கள் வீடியோ ஒளிப்பதிவாளருடன் வாகனங்களில் சோதனை மேற்கொண்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். இக்குழுவானது சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியில் பெறப்படும் புகார்களுக்கு ஏற்ப ரோந்து சென்று கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவர். நிலையான கண்காணிப்பு குழுவில் ஒரு உதவி செயற்பொறியாளர் மற்றும் 3 ஆயுதம் ஏந்திய காவலர்கள் வீடியோ ஒளிப்பதிவாளருடன் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியில் ஓரிடத்தில் நிலையாக இருந்து வாகனங்களை பரிசோதித்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக சோதனை மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள நேற்று கூடுதலாக நியமிக்கப்பட்ட 96 குழுக்களுடன் மொத்தம் 144 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்….