வேட்டவலம், ஆக.9: ஜமீன் கூடலூர் மகா காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு யாகம் வழிபாடு நடந்தது. வேட்டவலம் அடுத்த ஜமீன் கூடலூர் கிராமத்தில் உள்ள மகா காலபைரவர் கோயிலில் நேற்று ஆடி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை 11 மணிக்கு 108 மூலிகைகள் மற்றும் மட்டை தேய்காய் கொண்டு சிறப்பு யாகமும், பின்னர் பிற்பகல் 1மணியளவில் காலபைரவர், பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர், பிரத்தியங்கிரா தேவி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.