தேனி, மார்ச் 27: தேனி நகரில் நேரு சிலை மற்றும் அன்னஞ்சி பிரிவில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஊர்பெயர்களுடனான தகவல் போர்டு ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டமானது சுற்றுலா மாவட்டமாக உள்ளது. தேனி நகரை கடந்து கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலங்களான மூணாறு, குமுளி ஆகியவையும், சபரிமலை அய்யப்பன் கோயிலும் உள்ளது. தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கேரள மாநில சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் தேனி நகரை கடந்து சென்று வருகின்றனர். தேனி நகரை கடந்து செல்லும் போது, தேனி நகருக்குள் வாகனங்கள் வந்து செல்கின்றன.
அப்போது, தேனி நகரில் மதுரை, திண்டுக்கல், குமுளி, மூணாறு போன்ற நகரங்களுக்கு செல்லக்கூடிய பாதையை குறிக்கும் வகையிலும், இந்த ஊர்களுக்கான தூரத்தை குறிக்கும் வகையில் தகவல் பலகை இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் தேனி நகர் நேரு சிலை அருகே ரூ.5 லட்சம் சார்பில் ஹேண்ட் லீவர் போர்டு எனப்படும் தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, அன்னஞ்சிபிரிவிலும், ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் ஊர், தூரத்தை குறிக்கும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.