தேனி, பிப். 2: தேனி அரசினர் ஐடிஐ சார்பில் பயிற்சியாளர்கள் கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சாலைபாதுகாப்பு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, நேற்று தேனியில் உள்ள அரசினர் ஐடிஐ சார்பில் சாலைபாதுகாப்பு மாதவிழா நடந்தது. இதனையடுத்து, ஐடிஐயில் இருந்து சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணியை ஐடிஐ முதல்வர் சேகரன் தொடங்கி வைத்தார். தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.
பேரணி ஐடிஐயில் துவங்கி தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று, புது பஸ்நிலைய திருப்பம், புது பஸ்நிலையம் வழியாக கலெக்டர் அலுவலக திட்டச்சாலை, கலெக்டர் அலுவலகம் வழியாக அரசினர் ஐடிஐயை வந்தடைந்தது. இப்பேரணியில் சுமார் 100க்கும் அதிகமான ஆண், பெண் ஐடிஐ பயிற்சியாளர்கள் தங்கள் கைகளில் சாலை பாதுகாப்புக்கான விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். இதில் ஐடிஐ பயிற்சி அலுவலர் மருதுபாண்டி மற்றும் இதர ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.