சிவகங்கை, ஜன. 26: சிவகங்கையில் 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரண்மனைவாசலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் ஆஷாஅஜித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 28 மாணவ, மாணவிகள், 3 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வாக்குப்பதிவின் போது சிறப்பாக செயல்பட்ட 30 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
இதையடுத்து தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் டிஆர்ஓ மோகனசந்திரன், ஆர்டிஓ சுதிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொ) ஜெயமணி, தாசில்தார்கள் சிவராமன், மேசியதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.