திருச்சி, மார்ச் 11: திருச்சி அண்ணாமலைநகரில் நடந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி அண்ணாமலைநகரில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் என 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்க வேண்டும், கர்நாடக அரசு மேகதாது அணைக்கட்டும் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தும் வகையில் பொதுக்கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதையொட்டி 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.