திருப்பூர், பிப்.7: 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி திருப்பூர் மாவட்ட தெரு வியாபார தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி ஜெனரல் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். ஏஐடியுசி ஜெனரல் சங்க மாவட்ட செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் நடராஜன், மாநில பொதுச் செயலாளர் சேகர், மாவட்டத் தலைவர் மோகன், அவிநாசி செயலாளர் செல்வராஜ், தெருவோர வியாபாரிகள் சங்க நாசர் அலி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இதில், தெரு வியாபாரிகள் அனைவருக்கும் வியாபார சான்று மற்றும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் வழங்க வேண்டும். அடையாள அட்டை முழுமையாக வழங்கப்பட்டு வணிக குழு தேர்தல் நடத்திட வேண்டுவதுடன் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்துவதை உறுதிப்படுத்தி வணிக குழு முறையாக செயல்படுத்த வேண்டும். தெரு வியாபார பொருட்களை இரவில் பாதுகாப்புடன் வைப்பதற்கான இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.