திருப்பூர், ஜூன் 20: திருப்பூர், பல்லடம், வடக்கு அவிநாசிபாளையம் அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் கவின்குமார் (35). இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இவரது அருகாமை தோட்டத்தை சேர்ந்த அதிமுக கிளை செயலாளராக உள்ள சுப்பிரமணி மற்றும் அவருடைய மனைவி கவிதா ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணி, கவின்குமார் தோட்டத்தில் நடவு செய்யப்பட்டிருந்த 40 தென்னை மரங்களுக்கு ஆசிட் ஊற்றி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்ததென்னை மரங்கள் கருகியது. இது குறித்து கவின்குமார் அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாருக்கு போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் இது குறித்து மாவட்ட கலெக்டருக்கும், வேளாண்மை துறை அதிகாரிகளுக்கும் இழப்பீடு கேட்டும், ஆசிட் ஊற்றிய சுப்பிரமணி மற்றும் அவருடைய மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தார்.