ஏரல்: சிவகளை உச்சம்பறம்பில் இரும்பு காலத்தை சார்ந்த இரும்பு உருக்கு கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே சிவகளை, பெருங்குளம் குளத்துப் பகுதியில் கடந்த 2 நாட்களாக மாவட்ட வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. அப்போது சிவகளை உச்சம் பறம்பின் மேற்பகுதியில் இரும்பு காலத்தை சேர்ந்த தொழிற்சாலையின் இரும்பு கழிவுகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அப்பகுதியின் மேற்பரப்புகளை ஆய்வு செய்த சிவகளை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆசிரியர் மாணிக்கம், இதுகுறித்து கூறியதாவது: பொருநை நதிக்கரை நாகரிகத்தில் 3 பகுதிகளான சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை பகுதிகளில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் இரும்பு காலத்தை சார்ந்தவைகளாக உள்ளன. இரும்பினால் செய்யப்பட்ட வாள், கத்தி, உளி போன்ற இரும்பு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதற்கு ஆதாரமாக ஆங்காங்கே இரும்பு கழிவுகள் தொல்லியல் களங்களில் மேற்பரப்புக்கு வெளியே காணப்படுகின்றன. தற்போது சிவகளையில் 3ம் கட்ட அகழாய்வு நடைபெற உள்ள நிலையில் சிவகளையின் வடக்கே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரும்பு கழிவுகள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, என்றார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிவகளை மேற்கே ஸ்ரீமூலக்கரையில் ஆசிரியர் மாணிக்கம் இரும்பு கழிவுகளையும், கல்வட்டங்களையும் கண்டுபிடித்திருந்தார். அங்கு கடந்தாண்டு தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்தனர். அதேபோல் இப்பகுதியிலும் அகழாய்வு செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்….